ஈரோட்டில், அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு:40 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்


ஈரோட்டில், அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு:40 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்
x
தினத்தந்தி 9 Jun 2023 6:24 PM GMT (Updated: 9 Jun 2023 8:21 PM GMT)

ஈரோட்டில், அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 40 பஸ்களில் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு

ஈரோட்டில், அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 40 பஸ்களில் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திடீர் ஆய்வு

ஈரோட்டில் ஓடும் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் தடையை மீறி பொருத்தப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு சரக போக்குவரத்து துணை ஆணையாளர் சுரேஷ், வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பதுவைநாதன் (ஈரோடு மேற்கு), வெங்கட்ரமணி (கிழக்கு), சக்திவேல் (பெருந்துறை), ஆய்வாளர்கள் சுரேந்திரகுமார், சிவக்குமார், கதிர்வேல் ஆகியோர் ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

40 பஸ்கள்

பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என்று டெசிபல் மீட்டர் கருவி மூலமாக 105 அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் 40 பஸ்களில் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, '40-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் இன்று (அதாவது நேற்று) அகற்றப்பட்டு உள்ளன. மேலும் சில பஸ்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு அபராதம் விதிக்க கலெக்டரிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது' என்றனர்.


Related Tags :
Next Story