கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85.13 சதவீதம் பேர் தேர்ச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85.13 சதவீதம் பேர் தேர்ச்சி
x

பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 85.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்களை விட மாணவிகள் 12.14 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளி, மெட்ரிக்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 122 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9,893 பேர், மாணவிகள் 9,773 பேர் என மொத்தம் 19,666 பேர் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் ஜூன் 27-ந் தேதி பிளஸ்-1 தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

தேர்ச்சி சதவீதம்

இதில் மாணவர்கள் 7,834 பேர், மாணவிகள் 8,907 பேர் என மொத்தம் 16,741 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவிகள் 91.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மாணவர்கள் 79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் 12.14 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 85.13 ஆகும்.


Next Story