கட்டாலங்குளத்தில் ரூ.1.60 கோடியில் சாலை, மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா


கட்டாலங்குளத்தில் ரூ.1.60 கோடியில் சாலை, மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா
x
தினத்தந்தி 12 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 10:35 AM GMT)

கட்டாலங்குளத்தில் ரூ.1.60 கோடியில் சாலை, மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே கட்டாலங்குளத்தில் ரூ.1.60 கோடியில் சாலை மற்றும் மேம்பாலத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.

அடிக்கல் நாட்டுவிழா

கயத்தாறு அருகிலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் ரூ.1.60கோடியில் புதிய மேம்பாலம் மற்றும் குமாரபுரம்-செட்டிகுறிச்சி வரை சாலை அமைக்கும் பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இவ்விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு அந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், பஞ்சாயத்து தலைவர் தம்பாசேசுபால்ராயன், துணைத் தலைவர் மாரியம்மாள், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரை, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் யூஜின், உதவி கோட்டப்பொறியாளர் மோகனா, உதவிப் பொறியாளர் பிரேம் சங்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து ெகாண்டனர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

பின்னர் செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா, திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தட்டி திறப்பு விழா, அய்யனாரூத்து கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா ஆகியவை நடந்தது. இவ்விழாவில் கயத்தாறு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் ராஜா, பாண்டியராஜன், யூனியன் பொறியாளர் பால நமச்சிவாயம், யூனியன் மேற்பார்வையாளர்கள் பன்னீர்செல்வம், சிவன் ராஜ் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

களம் காணும் நிகழ்ச்சி

பின்னர் நூறுநாள் திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம் களம் காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களிடம் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கோரிக்கை மனுக்கள் பெற்றனர். அந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

இலவச வீட்டுமனை பட்டா

மேலும், விளாத்திகுளம் தாலுகா கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் 77 மாற்றுத்திறனாளிகள், 13 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 77 மாற்றுத்திறனாளிகள், 13 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இவ்விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜெயா, விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ், விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story