சேலத்தில், இன்று பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா-கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்


சேலத்தில், இன்று பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா-கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்
x
தினத்தந்தி 27 Jun 2023 8:36 PM GMT (Updated: 28 Jun 2023 9:26 AM GMT)

சேலத்தில் இன்று பெரியார் பல்கலைக்கழக 21-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்.

சேலம்

பட்டமளிப்பு விழா

சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணிக்கு பெரியார் கலையரங்கில் நடக்கிறது. பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகிக்கிறார். இதில், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.

விழாவில், 4 பேருக்கு முது முனைவர் பட்டமும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 505 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தங்கப்பதக்கம்

2021-2022-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த விழாவில் பட்டங்களை பெற உள்ளனர். இதுதவிர, பெரியார் பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 28 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 3 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 28 மாணவர்களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்குகிறார்.

கவர்னரிடம் பட்டங்களை பெறும் 608 மாணவர்களுடன் சேர்த்து சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இணைவு பெற்ற கலலூரிகளை சேர்ந்த 53,625 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் பயின்ற 1,076 மாணவர்களும், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் பயின்ற 6,415 மாணவர்களும் பட்டங்களை பெற உள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தலைமையில் பதிவாளர் தங்கவேல், தேர்வாணையர் கதிரவன் மற்றும் பேராசிரியர்கள், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.


Next Story