பர்கூர் மலைக்கிராமத்தில்10 ஏக்கரில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி


பர்கூர் மலைக்கிராமத்தில்10 ஏக்கரில்  புதிய ரக கேழ்வரகு சாகுபடி
x

பர்கூர் மலைக்கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு

பர்கூர் மலைக்கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

புதிய ரகம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை பகுதிகளான தாளவாடி, பர்கூர், கடம்பூர் ஆகிய இடங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் ராகி, பீன்ஸ், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கேழ்வரகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 'அத்தியந்தல்-1' என்ற புதிய ரக கேழ்வரகு பர்கூர் மலைப்பகுதியில் முதல்முறையாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த கேழ்வரகு ரகத்தை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர்.

இதுதொடர்பான செயல்முறை விளக்கம் ஈரோடு மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பர்கூர் அருகே கொங்காடை கிராமத்தில் நடைபெற்றது. உழவியல் விஞ்ஞானி ச.சரவணகுமார், பண்ணை மேலாளர் மு.திருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அதிக மகசூல்

இதுகுறித்து விஞ்ஞானி ச.சரவணகுமார் கூறியதாவது:-

ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது உணவுக்காக ராகி பயிரை அதிகமாக சாகுபடி செய்கின்றனர். ஏற்கனவே அவர்கள் பயிாிட்ட கேழ்வரகு பயிரில் ஒரு ஏக்கருக்கு 900 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள 'அத்தியந்தல்-1' என்ற ரகத்தில் ஏக்கருக்கு 1,500 கிலோ மகசூல் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பர்கூர் அருகே கொங்காடை கிராமத்தில் 10 ஏக்கரில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த பயிர் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. பலத்த காற்று வீசும்போது எளிதில் சாய்ந்து விடாது. நோய் எதிர்ப்பு திறன் மிக்கது. எனவே விவசாயிகளும் ஆர்வமாக இந்த பயிரை சாகுபடி செய்து உள்ளனர். அவர்களுக்கு ஒருங்கிணைந்த சாகுபடி தொழில்நுட்பம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story