திருப்போரூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு


திருப்போரூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
x

திருப்போரூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

நகையை கழற்றுங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வணிகர் தெருவை சேர்ந்தவர் மோகனா (வயது 65). இவரது கணவர் சண்முகம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள்கள் இருவரும் சென்னையில் வசிக்கின்றனர். மோகனா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை அவர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அய்யப்பன் கோவில் அருகே அவரை வழிமறித்த நபர் ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூப்பிடுகிறார் என்று கூறி உள்ளார். இதையடுத்து அவருடன் சாலையின் எதிர் திசையில் இருந்த நபரிடம் மோகனா சென்றார்.அங்கு சபாரி உடை அணிந்திருந்த நபர் மோகனாவிடம் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் கொலை, கொள்ளை நடந்து வரும் நிலையில் இவ்வாறு தங்கச்சங்கிலி, வளையல் அணிந்து செல்வது ஆபத்தானது என்று சொல்லி அவற்றை கழற்றுமாறு கூறி உள்ளார்.

நூதன முறையில்

அதை நம்பிய மோகனா அவற்றை கழற்றி கொடுத்துள்ளார். அந்த நபர் நகைகளை ஒரு பேப்பரில் சுற்றி பையில் வைத்து கொடுத்துள்ளார். பின்னர் மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். சிறிது தூரம் சென்ற மோகனா சந்தேகத்துடன் பையில் இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு சிறிய கல்லும் இரும்பு தகடும் இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகனா திருப்போரூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story