தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை


தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 28 Jun 2023 10:00 AM GMT)

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடந்தது.

தூத்துக்குடி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த வங்கி இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள்

இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை 10.30 மணி அளவில் மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 6 கார்களில் 16 பேர் வந்தனர்.

அவர்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். வங்கி தலைமை அலுவலகத்தின் 2 கட்டிடங்களிலும் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சோதனை ஏன்?

இந்த வங்கி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சில பரிவர்த்தனையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், வருமானவரித்துறை சட்டம் 285 பி.ஏ-ன் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் தகவல்கள் பரவியதால் பரபரப்பு நிலவியது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

இந்த சோதனையின்போது, வெளியாட்கள் யாரும் வங்கி தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வங்கி பணியாளர்கள் மட்டுமே வழக்கம் போல் உரிய அடையாள அட்டையை காண்பித்து அலுவலகத்துக்கு சென்றனர்.

மேலும், வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை காரணமாக தூத்துக்குடி தென்பாகம், மத்தியபாகம் போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் வங்கி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

வங்கி விளக்கம்

இதற்கிடையே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தைக்கு அனுப்பிய கடிதம் வெளியானது. அதில் 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ-ன் படி சட்டரீதியான விசாரணை நடந்தது.

இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும். இதனால் வங்கியின் எந்த செயல்பாடும் பாதிக்கப்படவில்லை' என்று தெரிவித்து உள்ளது.


Next Story