தூத்துக்குடியில்அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி


தூத்துக்குடியில்அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அம்மன் கோவில்களில் செவ்வாய்க்கிழமை மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

நவராத்திரி விழா

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.

சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கீழரதவீதியில் நடந்தது. இரவு 7 மணி அளவில் சூரனை வதம் செய்வதற்காக அன்னை சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சூரசம்ஹாரம் நடந்தது. இதில் சூரன் தலை, கஜமுகன் தலை, சிங்கம் தலை, மான் தலை, ரிஷி முகம் தலை, நரகாசுரன் தலை இறுதியாக மகிஷாசூரன் சம்ஹாரம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது.

நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போன்று மேலூர் பத்திரகாளியம்மன் கோவில், வடபாகம் சந்தணமாரியம்மன் கோவில், உச்சிமாகாளியம்மன் கோவில், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


Next Story