வால்பாறையில் நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு


வால்பாறையில்  நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:47 PM GMT)

வால்பாறையில் நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் நகராட்சி கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் தெருவிளக்கு எரியாது தொடர்பாகவும், பள்ளி சத்துணவு மையம் பராமரிப்பு, குடிதண்ணீர் தொட்டி பராமரிப்பு, சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது வால்பாறை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 15 பேர் அனுமதியின்றி அத்துமீறி நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நுழைந்து நகராட்சி தலைவரிடமும், ஆணையாளரிடமும் வளர்ச்சி பணிகள் ஏதும் நடைபெறவில்லை. அதனால் மன்ற கூட்டத்தை நடத்தக்கூடாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தகராறு

இதற்கு கவுன்சிலர்கள் இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று தெரிவியுங்கள் மன்ற கூட்டத்திற்குள் வரக்கூடாது என்று கூறினார்கள். இதனால் அத்துமீறி நுழைந்தவர்கள் கவுன்சிலர்களிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அதனால் மன்ற கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஆணையாளர் வால்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ்சார் வந்ததும் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

போலீசில் புகார்

இதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நுழைந்து ரகளையில் ஈடுபட்டவர்களால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.

எனவே அத்துமீறி நுழைந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஆணையாளருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்தனர். இந்த பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் நகராட்சி ஆணையாளர் பாலு வால்பாறை போலீசில் புகார் கொடுத்துள்ளார். வால்பாறை நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் வால்பாறையில் முதல் முறையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story