மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா


மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
x

மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன் தலைமை தாக்கினார். இயக்குனர் டாக்டர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் மதியழகன் வரவேற்றார். இதையடுத்து, தாளாளர் ரகுநாதன் பேசும்போது கூறியதாவது:-

ஒவ்வொரு மாணவரும் தினசரி நடப்பதை எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நேர மேலாண்மையை கடைபிடியுங்கள். உங்களை நீங்கள் ஒரு ஆய்வாளராக கருதி ஆராய்ச்சி செய்யுங்கள். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியையும், விளையாட்டையும் பின்பற்றுங்கள். இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம். காற்றை விலை கொடுத்து வாங்கும் நிலை வராமலிருக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மரங்களை நடுவோம். கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தது 100 மரங்களையாவது நட்டு பராமரிக்க வேண்டும். மரங்களை நடுவதால் தான் மழை பெற முடியும்.

மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள். படிப்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பல கலைகளில் திறமையை வளர்த்துக்கொள்க தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுங்கள். பல மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள். உங்களது நோக்கம் மிகப்பெரியதாக இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ரெயில்வே, பாரஸ்ட் சர்வீஸ் என்று உயர்ந்த பட்ச வேலை வாய்ப்புகளை நோக்கி நீங்கள் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார். இதில், நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story