30-ந் தேதிக்குள் விவரங்களை பதிவு செய்தால் ஊக்கத்தொகை


30-ந் தேதிக்குள் விவரங்களை பதிவு செய்தால் ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 27 Jun 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்ட பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் 30-ந் தேதிக்குள், தங்கள் விவரங்களை பதிவு செய்தால் 14-வது ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம்


விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊக்கத்தொகை

மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பி.எம்.கிசான் (விவசாயிகள் கவுரவ நிதி திட்டம்) திட்டத்தில் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணைத்தொகை, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 14-வது தவணை ஊக்கத்தொகை பெற e-KYC என்ற ஆன்லைனில் விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை e-KYC செய்யாத விவசாயிகள், நாளை மறுநாளைக்குள்(வெள்ளிக்கிழமை)செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அல்லது அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு தொடங்கி 14-வது தவணை தொகையை சரியாக பெற்று பயன்பெறலாம்.

30-ந் தேதிக்குள் விவரம் பதிவு

மின்னணு முறையில் வாடிக்கையாளர் அல்லது விவசாயியை தெரிந்துகொள்ளும் முறை e-KYC ஆகும். பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகளுக்கு இம்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் தவணையை பெற ஆதார் விவரங்கள் சரிபார்ப்பது அவசியமாகும்.முதல் வழிமுறையாக, ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் pmkisan.gov.in என்ற வலைதளத்தில் தங்களது ஆதார் எண், விவரங்களை உள்ளீடு செய்து, ஒருமுறை பயன்படுத்தும் கடவு (ஓடிபி) மூலம் சரிபார்க்கலாம். ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம்.

மேலும் 3-வது வழிமுறையாக பி.எம்.கிசான் செயலி மூலம் முக அடையாளம் கொண்டோ அல்லது அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகி இ.கே.ஒய்.சி. செய்துகொள்ளலாம். நாளை மறுநாளுக்குள்(வெள்ளிக்கிழமை) இதை செய்தால்தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story