அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை


அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
x

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

சென்னை,

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சென்னை, திருவண்னாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய ரெய்டு, 24 மணி நேரத்தை கடந்த நிலையில், இன்றும் தொடர்கிறது. அமைச்சர் எ.வ.வேலுவின் மகனுடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்த சோதனையானது இன்று முழுவதும் நீடிக்கும் என கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது நினைவுகூரத்தக்கது


Next Story