லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை..!


லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை..!
x
தினத்தந்தி 13 Oct 2023 4:27 AM GMT (Updated: 13 Oct 2023 5:05 AM GMT)

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கோவையில் உள்ள தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்பட அவர் தொடர்பு உடைய 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கேரள மாநில பதிவு எண் கொண்ட காரில் வருமானவரித்துறை அதிகாரிகள் கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டிற்கு வந்தனர். அவர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் வந்திருந்தனர். காரில் வந்த அதிகாரிகள் 3 குழுக்களாகப் பிரிந்து சென்று லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, ஹோமியோபதி கல்லூரி மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இதேபோல் மற்றொரு குழுவினர் கோவை கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள மார்ட்டின் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story