மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு


மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 24 Jan 2023 7:30 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் இருந்து மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

4½ கோடி முட்டை உற்பத்தி

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் சுமார் 6 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் கணிசமான அளவு முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

அகில இந்திய அளவில் நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், முட்டை ஏற்றுமதியில் தொழிலில் முதலிடத்திலும் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே கப்பல்களில் கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மலேசியாவுக்கு ஏற்றுமதி

தற்போது முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் இருந்து குறிப்பாக நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கியது. மலேசியா நாட்டில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும், அங்கு அவர்களுக்கு தேவையான அளவு முட்டை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நாமக்கல் பகுதிகளில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வரும் மாதங்களில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து, குறிப்பாக நாமக்கல்லில் இருந்து முட்டைகளை வாங்குவார்கள் என்று முட்டை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

40 கண்டெய்னராக உயரும்

இது குறித்து ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:-

நாமக்கல் மண்டலத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 50 லட்சம் முட்டைகள் முதன் முதலாக மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து ஆர்டர்கள் கிடைத்து வருகிறது. இந்த மாதம் மட்டும் 20 கண்டெய்னர் மூலம் 1 கோடி முட்டைகள் அனுப்பட உள்ளது. இது பிப்ரவரி மாதம் 40 கண்டெய்னர்களாக உயரும் வாய்ப்பு உள்ளது.

நாமக்கல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தரமாகவும், ஏற்றுமதிக்கான எடை சரியாகவும் உள்ளதால், பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் நாமக்கல் முட்டையை விரும்பி வாங்க தொடங்கி உள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் முட்டை விலை குறைவாகவே உள்ளது.முட்டை ஏற்றுமதி அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story