சென்னை விமான நிலையத்தில் இருந்து கோடைகாலத்தில் வெளிநாடு செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக விமான சேவை அதிகரிப்பு


சென்னை விமான நிலையத்தில் இருந்து கோடைகாலத்தில் வெளிநாடு செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக விமான சேவை அதிகரிப்பு
x

சென்னை விமான நிலையத்தில் இருந்து கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக விமான சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் சென்னை விமான நிலையத்தில் கோடை காலத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளும் கோடை காலத்தில் குறைவாகவே இயக்கப்பட்டு வந்தன.

தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால் சுமுக நிலை நிலவுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்காக மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருகின்றன. இதையடுத்து விமான நிறுவனங்கள், வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரித்துள்ளன.

அதன்படி ஜெர்மன் பிராங்க்பர்ட் நகரில் இருந்து சென்னைக்கு தற்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் விமான சேவைகள் இயக்கி வரும் விமானம் மார்ச் மாதத்தில் இருந்து வாரத்தில் 5 விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகின்றன.

சென்னை-பாரிஸ் இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வரும் விமான சேவையை வாரத்தில் 5 நாட்களாக அதிகரித்துள்ளன.

சென்னை- அபுதாபி இடையே வாரத்தில் 7 விமான சேவைகள் இயக்கி வருகின்றன. இனி வாரம் 14 விமான சேவைகளாக அதிகரிக்க இருக்கின்றன.

சென்னை- செயின் டென்னிஸ் இடையே வாரத்தில் ஒரு விமானம் இயங்கி வருகிறது. இனி வாரத்தில் 2 நாட்கள் விமான சேவைகளை இயக்க இருக்கின்றது.

சென்னை-சிங்கப்பூர் இடையே பயணிகள் விமானம் கடந்த பல ஆண்டுகளாக தினமும் இரவில் மட்டும் ஒரு சேவை இயக்கி வந்தது. அது தற்போது இரவில் 2 சேவைகளும், பகலில் ஒரு சேவையும் என நாள் ஒன்றுக்கு 3 சேவைகளை இயக்கத் தொடங்கி விட்டன.

சென்னை- கோலாலம்பூர் இடையே தினமும் இரவில் ஒரு சேவையை மட்டும் இயக்கி வந்த விமானம், தற்போது பகலில் ஒரு சேவை என்று ஒரு நாளைக்கு 2 சேவைகளாக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மார்ச் 26-ந் தேதியில் இருந்து சென்னை- அபுதாபி இடையே புதிய பன்னாட்டு விமானத்தை தினசரி விமானமாக இயக்க இருக்கிறது. சென்னை-மஸ்கட் இடையே மற்றொரு பன்னாட்டு விமானத்தை தினசரி விமானமாக இயக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளது. ஒரே நாளில் 2 புதிய பன்னாட்டு விமான சேவைகளை அந்த நிறுவனம் தொடங்குகிறது.

சென்னை- லண்டன் இடையே இயக்கப்படும் விமானத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், கூடுதல் விமான சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புதிதாக கூடுதல் விமான சேவைகள் வெகு விரைவில் தொடங்க இருப்பதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெரும் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story