சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2023 8:00 PM GMT (Updated: 20 Oct 2023 8:01 PM GMT)

குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அங்கு பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

நீலகிரி

குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அங்கு பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

2-வது சீசன்

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி, குன்னூரில் உள்ள பூங்காக்களில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

இங்கு நூற்றாண்டு பழமையான ருத்ராட்சை, காகித, யானைக்கால் உள்பட 50 வகையான மரங்கள் உள்ளன. 2-வது சீசனையொட்டி பல்வேறு வகையான மலர் நாற்றுகள் கடந்த ஜூலை மாதம் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. தற்போது அந்த செடிகளில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகிறது.

கண்டு ரசிப்பு

2-வது சீசனையொட்டி அங்குள்ள கண்ணாடி மாளிகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் மலர்கள், கற்றாழை, பெரணி உள்ளிட்ட செடி வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. சிம்ஸ் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள மலர்களை புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

மேலும் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் சிம்ஸ் பூங்கா களை கட்டி உள்ளது.


Next Story