ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
x

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

வெள்ளப்பெருக்கு

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி தடை விதித்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. மேலும் கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

பரிசல் இயக்க அனுமதி

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை கலெக்டர் சாந்தி நீக்கி உத்தரவிட்டார்.

பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கோத்திக்கல் வரை உற்சாகமாக பரிசலில் சென்று மகிழ்ந்தனர். எனினும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து சென்றனர்.

நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

இந்தநிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரபடி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.


Next Story