தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு: குற்றால அருவிகளில் குளிக்க தடை


தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு: குற்றால அருவிகளில் குளிக்க தடை
x

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான சீசன் காலம் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.

மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று மதியம் 2 மணி அளவில் மெயின் அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய அவர்கள் மற்ற அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி அருவியின் ஒரு பகுதியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் மீண்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Next Story