பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்


பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
x

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

கரூர்

ஆய்வு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி ேபசினார். அப்போது அவர் கூறியதாவது:- கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதேபோல் குழந்தை மரணம் குறித்து ஆய்வு செய்து ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின்கவனிப்பு 42 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் செய்யப்பட வேண்டும். மேலும், 5-வது ஆண் குழந்தை வேண்டுமென்று தொடர்ச்சியாக கருவுற்ற காரணத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தாய்மார் ஒருவர் உயிர் இழக்க நேரிட்டது.

3 மாத இருப்புகள்

எனவே 2 குழந்தைகளுக்கு பின் கருவுற்ற தாய்மார்களுக்கு கூடுதல் கவனத்துடன் கவனித்து அவர்களுக்கு கருத்தடை செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் பற்றி ஆய்வு செய்து பிறவி காது கேளாமை போன்ற நோய்களை துரிதமாக கண்டறிய வேண்டும்.

மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு, எல்லா மருத்துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்புகள் இருப்பதை அந்தந்த டாக்டர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சல் மற்றும் டெங்கு பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, வரும் காலங்களில் காய்ச்சல் மற்றும் டெங்குவினால் தீவிர நோய் பரவல் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் தாமோதரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமாமணி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story