கொரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்கள் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் - சரத்குமார்


கொரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்கள் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் - சரத்குமார்
x

கொரோனா பரவல் அதிகரிப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகெங்கும் பரவிய கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தில் பரவத்தொடங்கியது. கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் வாயிலாக கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்த சூழலில் தற்போது மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளொன்றுக்கு 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவல் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

நோய்ப்பரவல் கட்டுக்குள் இருந்த சமயம் மக்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பி பொருளாதாரத்தை மீட்டிட தீவிரமாக பணி செய்து வருகிறார்கள். இந்தநிலையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவுவது துரதிருஷ்டவசமானது என்றாலும் கூட, தடுப்பூசி செலுத்துதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு வெளியிட்டு வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும்.

மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய்த்தொற்று பரவலில் இருந்து தங்களையும், தங்கள் சுற்றத்தாரையும் பாதுகாத்து கொள்ளமுடியும். எனவே, பொதுமக்கள் கொரோனாவின் தீவிர பரவல் குறித்த முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story