உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்


உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்
x

உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படத்தால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அரியலூர்

''கலப்படம்... கலப்படம்... எங்கும் எதிலும் கலப்படம்... ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம், அரிசியிலே மூட்டைக்கு அரை மூட்டை கல் கலப்படம், அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம், காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்...'' என்ற திரைப்பட பாடல் 1953-ம் ஆண்டு வெளிவந்த 'திரும்பிப்பார்' என்ற படத்தில் இடம்பெற்றது.

அந்த பாடல் வரிகள் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

அந்த அளவுக்கு உணவுப்பொருள் கலப்படம் அதிகரித்து விட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், புதிய புதிய உத்திகளை கையாண்டு புதுவிதமான கலப்படத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அதிக லாபம்

கலப்படத்தை 3 வகைகளாக பிரிக்கின்றனர். இயற்கையான கலப்பட பொருட்கள், தெரியாமல் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள், தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள்.

இதில் 3-வது வகையான தெரிந்தே சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் தான் இன்று பல உணவு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கலப்படம் செய்பவர்களின் முக்கிய நோக்கம், உணவு பொருட்களின் அளவை அதிகரித்து, அதிக லாபத்தை ஈட்டுவது. அதேபோல் உணவு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோரின் கவனத்தை ஈர்த்து, லாபத்தை அதிகரிப்பது. மக்களின் உடல்நலத்தை பற்றி இந்த சுயநலக் கும்பல் கவலைப்படுவது இல்லை. சமூக நலன்பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்வது இல்லை.

உணவில், குளிர்பானத்தில் கலப்படம் என்று அனைத்து பொருட்களுமே தற்போது கலப்படமாக மாறிவிட்டன. சரி, கலப்பட உணவு பொருட்களை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டதே என்று நினைத்து, மருந்து சாப்பிடச் சென்றால், மருந்திலும் கலப்படம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இவ்வாறு அதிகரித்து வரும் உணவு பொருள் கலப்படத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இதுபற்றி அரியலூரை சேர்ந்த பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:-

குறைந்த விலையில் கிடைப்பதால்...

அரியலூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் செல்வகுமார்:- குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் கலப்படம் என தெரியாமல் அதனை வாங்குகின்றனர். ஒரு பொருளின் தரத்தை பார்த்து வாங்குவது தற்போது அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பொருட்கள் விலை குறைவாக கிடைப்பதால் அதனை நோக்கியே செல்கின்றனர். சிலர் அறியாமையால் செல்கின்றனர். சிலர் வேறு வழி இல்லாமல் அதனை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பொருட்களை டி.வி.யில் பிரம்மாண்டமாக காட்டுகின்றனர். ஆனால் அதற்கு கீழே ஒரு ஸ்டார் குறியீடு அல்லது சிறிய எழுத்தில் எந்தெந்த பொருட்களை சேர்த்துள்ளோம் எனக் குறிப்பிடுகின்றனர். மேலோட்டமாக பார்க்கும்போது அந்தப் பொருள் ஒரிஜினல் போலவே தோற்றமளித்தாலும் அதில் கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை கலப்பதால் அதன் உண்மை தன்மை மாறுகிறது. இருந்த போதிலும் பொதுமக்களுக்கு அது தெரிவதில்லை. டி.வி. சேனல் மற்றும் விளம்பரங்களில் பார்க்கும் பொருட்கள் உண்மை என நம்பி வாங்குகின்றனர். அதைவிட விளம்பரம் செய்யாத பொருட்களும் தரமாக கிடைக்கின்றன. ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்க மறுக்கின்றனர். பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் மிக கவனமாக வாங்க வேண்டும். ஏனெனில் பொருட்களின் தரத்தை பார்க்காமல் காசு குறைவு என பார்த்து வாங்குவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கு செலவு செய்வதை விட தரமான பொருட்களை சிறிது விலை கூட இருந்தாலும் வாங்கினால் ஆரோக்கியமாக வாழலாம்.

மனிதாபிமானம் இல்லாமல்

செந்துறை பகுதியை சேர்ந்த செல்வம்:- எந்திரமயமான வாழ்க்கையில் அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டது. பணம் சம்பாதிப்பது மட்டுமே குறியாக இருக்கும் வியாபாரிகள் மனிதாபிமானம் இல்லாமல் உணவு பொருட்களிலும் கலப்படம் செய்து காசு பார்க்கிறார்கள். இதில் அரசு தனிக்கவனம் செலுத்தி தடுக்க வேண்டும். உணவு கலப்படத்தை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால் மக்கள் பண்டைய முறைப்படி நேரடியாக விவசாயிகளிடம் உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் தான் முடியும்.

தண்டனை வழங்க வேண்டும்

விக்கிரமங்கலத்தை சேர்ந்த சமையல் கலைஞர் வல்லரசு:- உணவு பொருட்களில் கலப்படம் என்பது தற்போது மிக சாதாரணமான ஒரு விஷயமாகவே மாறி வருகிறது. அன்றாடம் பயன்படுத்தும் உயர்தர அரிசியில் சாதாரண அரிசியை பாலீஷ் செய்து சேர்த்து விடுகின்றனர். உயர்தர பருப்பில் சாதா பருப்பை சேர்த்து விடுகின்றனர். கடலை எண்ணெய், நல்லெண்ணெயில் சாதா ஆயில்களை சேர்த்தல் போன்றவை அவ்வப்போது கலப்படம் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவைகளை சமைக்கும் பொழுது சாதா அரிசி, பருப்பு போன்றவை சீக்கிரம் வேகாமலும், உயர்தர அரிசி, பருப்பு போன்றவை சீக்கிரம் வெந்து விடுவதை பார்க்க முடியும். இப்படி இவைகளோடு மட்டுமல்லாமல் சீனி, டீத்தூள், மிளகு போன்ற மளிகை பொருட்களிலும் கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர். இப்படி கலப்படம் செய்யப்பட்டிருப்பதை சமைக்கும் பொழுது நாங்கள் கண்டுபிடித்து விட்டால் அந்தப் பொருட்களை வாங்கி கொடுத்தவர்களிடம் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதை காண்பித்து அதை கொடுத்த மளிகை கடையில் திருப்பிக் கொடுத்து விடுவோம். மேலும் எந்த பிராண்டில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததோ அதை கடைக்காரர்களிடமும் சொல்லி வாங்க வேண்டாம் என்று சொல்லிவிடுவோம். மேலும் நாங்களும் சமையலுக்கு அந்த கலப்படம் செய்யப்பட்டிருந்த பிராண்டை வாங்க பரிந்துரைக்க மாட்டோம். கலப்படம் செய்யப்பட்ட பொருளை கொடுக்கும் கடைக்காரர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க பொதுமக்கள் தயங்க கூடாது.

ஆன்லைன் வர்த்தகம்

தா.பழூரை சேர்ந்த மீனாட்சி:- அனைத்து பொருட்களிலும் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்ட நிலையில் உள்ளூர் வணிகர்களை விட்டுக் கொடுக்க மனம் இல்லாத மக்கள் மட்டுமே உள்ளூர் கடைகளில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். ஆன்லைனில் பெறப்படும் பொருட்கள் கலப்படமாக இருந்தால் அவற்றை திருப்பி அனுப்பி விடும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உள்ளூர் கடைகளில் அதில் இருக்கும் கலப்படம் குறித்து நமக்கு தெரிந்தாலும் நாம் அவர்களிடம் திரும்ப கொடுப்பதில்லை. உள்ளூர் வியாபாரிகள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க முன் வர வேண்டும். கலப்படம் செய்யப்பட்டபொருட்களை கண்டுபிடிக்கும் பொதுமக்கள் வியாபாரிகளிடம் அவற்றை திரும்ப கொடுத்து தங்களது உரிமையை நிலைநாட்ட வேண்டும். உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படம் அறவே மன்னிக்க முடியாதவை. வியாபாரிகள் அவர்கள் பங்குக்கு கலப்படம் செய்வதால் பல பொருட்கள் தயாரிக்கும் இடத்திலேயே கலப்படமாக வருகிறது. அவை குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு தேவை. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கடைகளில் போதுமான சோதனைகள் செய்து தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்:- கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்புத் துறையும் தீவிரமாக நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கும் இதுபற்றிய போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதையும் எங்களால் முடிந்தளவு நவீன காலத்தில் வீடியோக்கள் மூலம் தெரிவித்து வருகிறோம். கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக கலப்படத்தை புகுத்தி கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிப்பை பார்க்கும்போது வியப்பாகவே இருக்கிறது. அவர்கள் செய்வது தவறு என்று தெரியாமலேயே இதை தொடர்ந்து செய்கிறார்கள். நாங்களும் பாகுபாடு பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறோம். பொது மக்களும் உணவு கலப்படம் தொடர்பான புகார்களை 'தமிழ்நாடு புட் சேப்டி கன்சூமர்' (tamilnadu food safety consumer) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலப்படம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை?

* சாப்பிடத் தகுதியற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், முதலில் அந்த பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு, விளக்கம் கேட்கப்படும். அவர்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அபராதம், கடைக்கு சீல் வைக்கப்படும்.

* 2-வது முறையும் சம்பந்தப்பட்ட நபர் கலப்படம் செய்வதில் ஈடுபட்டால், அந்த பொருள் மாதிரி உறுதி செய்யப்பட்டு, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். அவருடைய கடை மூடப்படுவதோடு, சிவில் கோர்ட்டு மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும்.

கலப்படத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்

எந்தெந்த உணவு பொருளில், என்ன மாதிரியான பொருளை கலப்படம் செய்கிறார்கள் என்ற விவரம் வருமாறு:-

உணவு பொருட்கள் - கலப்படம் செய்யப்படும் பொருட்கள்

தானியங்கள் - கற்கள், களை விதைகள், சேதம் அடைந்த தானியங்கள், தூசி

நெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி - ஸ்டார்ச் பவுடர், மசித்த உருளைக்கிழங்கு, டால்டா

பால் அல்லது தயிர் - ஸ்டார்ச் தூள், தண்ணீர்

டீத்தூள் - செயற்கை நிறங்கள்

காபி தூள் - புளியங்கொட்டை தூள் அல்லது சிக்கரி

பருப்பு வகைகள் - குரோமேட், ரசாயனம் மற்றும் சாயங்கள்

சமையல் எண்ணெய் - கனிம எண்ணெய், செயற்கை நிறங்கள், ஆமணக்கு எண்ணெய்

மிளகாய், மல்லி தூள் - சிவப்பு செங்கல்தூள், ஈய உலோகத்தூள், சாணப் பொடி

கடுகு - அர்ஜெமோன் விதைகள்

மிளகு - உலர்ந்த பப்பாளி விதைகள்

மஞ்சள் தூள் - தொழில்துறை சாயம், மெட்டானில் மஞ்சள் சாயம், சுண்ணாம்புத் தூள்

தேன் - வெல்லப்பாகு, சர்க்கரை


Next Story