இந்தியர்கள் ஒரே குடும்பமாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


இந்தியர்கள் ஒரே குடும்பமாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

இந்தியர்கள் ஒரே குடும்பமாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும் என்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

சென்னை,

பா.ஜ.க.வின் தாய் அமைப்பாக விளங்கிய பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த தீனதயாள் உபாத்யாயா பற்றிய 'தீனதயாள் உபாத்யாயாவின் முழுமையான பணிகள்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள டேக் தட்சிணாமூர்த்தி அரங்கில் நடந்தது.

ஒருங்கிணைந்த மனிதநேயத்துக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையின் தமிழ்நாடு பிரிவு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தீனதயாள் உபாத்யாயா புத்தகத்தை வெளியிட்டார். முன்னதாக அவர் தீனதயாள் உபாத்யாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காரல் மார்க்ஸ்

தொடர்ந்து நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

ஒவ்வொரு தனி மனிதரின் உரிமையும் பாதுகாக்கபடவேண்டியதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சமுதாயத்தில் தனி மனித வளர்ச்சி என்பது நிறைய பிரச்சினைகளை உருவாக்கும். ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்தால்தான் நீர் உருவாகும். உலகத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்ப்பதால்தான் இடையூறு ஏற்படுகிறது. காரல் மார்க்சும் தனிமனித வளர்ச்சியில்தான் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அது வேறு விதம். குடும்பமாக இருப்பதிலும், சமூகமாக இருப்பதிலும் காரல் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

ஏனென்றால் தனிமனித வளர்ச்சியை குடும்பம் தடுக்கும் என்று அவர் நம்பினார். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. ஏகாதிபத்தியத்தை நான் எதிர்க்கிறேன். ஆனால் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இது ஒரு வரலாற்று தேவையாக மாறிப்போனது. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சமூக கட்டமைப்பை சீர்குலைத்தார்கள். காரல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்முடைய அனைத்து வகையான உணர்ச்சிகளையும் வேதியியல் மாற்றம் என்று சொன்னார்கள். அவர்கள் கூறியது இன்று வரை பிரதிபலிக்கிறது.

ஒரே குடும்பமாக, வலிமையாக...

டார்வின் என்ற ஒரு சிறந்த மனிதர் குரங்கிலிருந்துதான் மனிதர்கள் வந்தார்கள் என்று கூறினார். நாம் அனைவரும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்திலும் டார்வின் கோட்பாட்டை படித்தோம். அனைவரும் அதை நம்புவதில்லை. ஆனால் சிலர் அதை முழுமையாக நம்புகிறார்கள். இதன் வழியாகத்தான் புரட்சி ஏற்பட்டது என்றும், நாம் அனைவரும் குரங்கிலிருந்துதான் பரிணமித்தோம் என்றும் டார்வின் கூறினார். டார்வின் முதலாளித்துவத்தின் தார்மீகத்தை நியாயப்படுத்தினார்.

தற்போதும் இந்தியாவில் இது குறித்து (குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான் என்பது) நாம் விவாதித்து வருகிறோம். படித்து வருகிறோம். தேர்வுகளிலும் கேள்விகளாக கேட்கப்படுகிறது. இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வுகளில்கூட இதுகுறித்த கேள்விகள் வருகின்றன. இந்தியா ராணுவத்திலும், பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் போதாது, இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும், வலிமையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ஒருங்கிணைந்த மனிதநேயத்துக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story