ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் நிறுத்த திட்டம்


ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் நிறுத்த திட்டம்
x

விசாகப்பட்டினத்தில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது.

சென்னை

விக்ராந்த் போர்க்கப்பல்

'மேக் இன் இந்தியா' திட்டத்தில் முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த கப்பல் விசாகப்பட்டினத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிழக்கு மண்டல கடற்படையை சார்ந்தது.

262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலத்தில் கடலில் செல்லும்போது மிதக்கும் தீவு போல காட்சி அளிக்கும் விக்ராந்த் போர்க்கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் அந்த கப்பல் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட உள்ளது.

காட்டுப்பள்ளி துறைமுகம்

விக்ராந்த் போர்க்கப்பலை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்துவது தொடர்பாக கடற்படை அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காட்டுப்பள்ளி துறைமுகம் போர்க்கப்பல்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டதாக, கடற்படை தரப்பில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு பாதுகாப்பு குழுவிடம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

காட்டுப்பள்ளி துறைமுகம் பெரிய அளவிலான கப்பல்களை நிறுத்துவதற்கான ஆழம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தளத்துக்கான பணிகள் முடிவடையும் வரையிலும் விக்ராந்த் போர்க்கப்பல் இடைக்கால ஏற்பாடாக காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது. இதற்காக காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கூடுதல் கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

8 ஆண்டுகள் நிறுத்த திட்டம்

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "காட்டுப்பள்ளி துறைமுகத்தில் விக்ராந்த் போர்க்கப்பலை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. அந்த பணிகள் முடிந்த உடன் கொச்சியில் இருந்து கப்பல் கொண்டுவரப்பட உள்ளது. விக்ராந்த் கப்பல் அங்கு சுமார் 8 ஆண்டுகள் வரையிலும் நிறுத்த வாய்ப்பு இருக்கிறது" என்றனர்.


Next Story