நாமக்கல் மாவட்டத்தில்வேளாண் திட்டங்களை அதிகாரி ஆய்வு


நாமக்கல் மாவட்டத்தில்வேளாண் திட்டங்களை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 15 Feb 2023 7:00 PM GMT (Updated: 15 Feb 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி கள ஆய்வு மேற்கொண்டார். இதன் தொடக்கமாக வெண்ணந்தூர் அருகே தொட்டியவலசு கிராமத்தில் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள மகாகனி, தேக்கு மரக்கன்றுகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்ட வயல்கள் மற்றும் மக்காச்சோளம், தென்னை வயல்களை கள ஆய்வு செய்தார்.

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊனாந்தாங்கல் கிராம ஊராட்சியில் உருவாக்கப்பட்டுள்ள தரிசு நில தொகுப்புகளை ஆய்வு செய்தார். மேலும் விளைபொருட்களை தேசிய மின்னணு சந்தை மூலம் சந்தைப்படுத்துதல் குறித்து நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்தார். புதுச்சத்திரம் வட்டாரம் நவணி கிராமத்தில் "இ"-வாடகை செயலியின் பயன்பாடுகள் குறித்து அவரது தலைமையில் விவசாயிகளிடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், தோட்டக்கலை துணை இயக்குனர் கணேசன், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) நாசர் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர்கள், வேளாண்மை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story