ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு


ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு
x

அஞ்சலகங்களில் ஆண்டுக்கு ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


அஞ்சலகங்களில் ஆண்டுக்கு ரூ.399 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அறிமுகம்

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், ஆண்டிற்கு வெறும் ரூ.399 மட்டும் செலுத்தினால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். இதற்கு விண்ணப்ப படிவம், அடையாள முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் விரல் ரேகை மூலம் வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம்) விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60ஆயிரம் வரை, புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30ஆயிரம் வரை வழங்கப்படும்.) விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1லட்சம் வரை வழங்கப்படும்.

பயண செலவு

விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25ஆயிரம் வரை வழங்கப்படும்.

விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். ஆண்டிற்கு வெறும் ரூ.399 மட்டும் செலுத்தி மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த குழு விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்பு களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.


Next Story