மாங்காட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் அளவிடும் பணி தீவிரம்


மாங்காட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் அளவிடும் பணி தீவிரம்
x

மாங்காட்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் அளவிடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

காஞ்சிபுரம்

பஸ் நிலையம்

மாங்காட்டில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

மாங்காட்டில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது மாங்காட்டில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் மாங்காட்டில் இருப்பதால் தற்போது அந்த இடத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வளர்ந்திருந்த முள்செடிகள் அகற்றப்பட்டு அந்த இடத்தை சமன் செய்து சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அளவீடு செய்யும் பணி தீவிரம்

மேலும் அந்த பகுதியில் அதிக அளவில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் அதனை மோட்டார்கள் கொண்டு தண்ணீரை அகற்றி இடத்தை அளவீடு செய்யும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன், துணை தலைவர் ஜபருல்லா, மாங்காடு நகராட்சி கமிஷனர் சுமா, மாங்காடு கோவில் நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் அளவீடு செய்து பஸ் நிலையம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்பது குறித்து அளவீடு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் பஸ் நிலையம் அமைத்து கடைகளும் கட்டுவதற்கான வரைப்படங்கள் தயார் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாங்காட்டில் பஸ் நிலையம் அமைப்பதற்காக இடத்தை அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story