சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை வரத்தொடங்கிய வெளிநாட்டு வீரர்கள்...!


சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை வரத்தொடங்கிய வெளிநாட்டு வீரர்கள்...!
x
தினத்தந்தி 23 July 2022 11:46 AM GMT (Updated: 23 July 2022 11:47 AM GMT)

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு வெளிநாட்டு வீரர்கள் சென்னை வரத்தொடங்கிய உள்ளனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கிறது

இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு அதிகமான வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்க சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், விடுதிகள் தமிழக அரசு எடுத்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வீரர்கள், வீராங்கனைகள் வந்தால் எந்தவித தடையின்றி செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருந்து 4 வீரர்களும், ஜாம்பியா, ஹாங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து 2 வீரர்களும் சென்னை வந்தனர்.

இவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள செஸ் ஒலிம்பியாட் சின்னம் அருகே வீரர்கள் நின்று புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.


Next Story