'லிப்ட்' கொடுத்த விவசாயி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்


லிப்ட் கொடுத்த விவசாயி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
x

‘லிப்ட்’ கொடுத்த விவசாயியை இரும்பு கம்பியால் வாலிபர் தாக்கினார்.

அரியலூர்

செந்துறை:

'லிப்ட்' கேட்டு சென்றார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 55), விவசாயி. இவர் வல்லத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்த மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது குவாகம் கிராமத்தின் காலனி தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளை வழிமறித்து 'லிப்ட்' கேட்டுள்ளார். இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்ட வேண்டும் என்பதால் சின்னதுரை குறைவாக மது குடித்துவிட்டு, மீதம் இருந்த மதுவை பாட்டிலுடன் அந்த வாலிபரிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருந்து, இறங்கும்போது தன்னிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இரும்பு கம்பியால் தாக்குதல்

இதையடுத்து இருவரும் ேமாட்டார் சைக்கிளில் குவாகம் நோக்கி வந்துள்ளனர். குவாகம் கடைவீதியில் வந்தபோது சின்னதுரை மதுபானத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர், வரும் வழியிலேயே அந்த மதுவை குடித்துவிட்டதாகவும், தனது வீட்டில் மது என்றும், அதனை எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சின்னதுரை, அந்த வாலிபரின் வீட்டு அருகே சென்று மதுபானம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் இரும்பு குழாயை எடுத்து சின்னதுரையின் தலை மற்றும் காலில் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சின்னதுரையின் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

30 தையல்

இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்து வந்து சின்னதுரையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு 30 தையல் போட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார், அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story