ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?


ஆதார் எண் இணைப்பு அவசியமா, அலைக்கழிப்பா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை, படிப்பு முதல் வேலை வரை, எங்கும், எதற்கும், எதிலும் ஆதார்? என்ற நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டு வருகிறது.

ஆதார் அறிமுகம்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற படிப்பினையை மத்திய அரசுக்கு உணர்த்தியது.

அப்போதுதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் கை விரல் ரேகை, கண் கருவிழி ஆகிய உடல்கூறு பதிவுகளுடன் தனி அடையாள எண்ணை வழங்க வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்துக்கு உதித்தது.

அதற்காக இந்திய தனிநபர் அடையாள ஆணையம் என்ற அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு 12 இலக்க எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது.

140 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் இதுவரையில் 131 கோடி பேருக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுவிட்டது.

எதிர்ப்பு கிளம்பியது

தனி நபர் அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் ஆனாலும் நாளடைவில் மத்திய அரசின் மானியங்கள், சலுகைகளை பெறுவதற்கும் அது அவசியம் என்று ஆணைகள் வந்தன.

ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. முக்கிய விவாத பொருளாகவும் மாறியது. நீதிமன்றங்கள் வரை வழக்குகளும் சென்றன. இறுதியில் ஆதாரே வென்றது.

அதையடுத்து வருமான வரி செலுத்துவதற்கான பான் எண் (நிரந்தர கணக்கு எண்), வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை, வருங்கால வைப்பு நிதி எண் போன்ற அனைத்திலும் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டது.

ஆயுதமானது

வங்கிகள் மூலம் சமையல் கியாஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆனவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டன. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 445 கோடி மானியத்தொகை மிச்சம் ஆனது.

ரெயிலில் 'டிக்கெட்' முன்பதிவு செய்ய தனி நபருக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கிலும் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆனவுடன் போலி கணக்குகள் ஒழிக்கப்பட்டன. இதுபோன்று மத்திய அரசின் மானியங்கள், திட்டங்களில் முறைகேடுகளை ஒழித்துக்கட்டும் ஆயுதமாக ஆதார் மாறியது.

தமிழ்நாட்டில் கட்டாயம்

தமிழகத்தை பொறுத்த அளவில் முதலில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. பின்னர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் 1 கோடி ஆதார் எண்கள் இதுவரை இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதில், திட்ட பயனாளிகளின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரியாக செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாள பதிவை மேற்கொள்ளலாம் அல்லது ஆதார் ஓ.டி.பி.முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்' என்ற அறிவிப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இதுபோன்ற ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? என்பது பற்றிய மக்கள் பார்வை வருமாறு:-

வற்புறுத்தக்கூடாது

சிவகாசியை சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன்:- பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆதார் எண்கள் மூலம் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பின்னர் அந்த பேச்சு அப்படியே அடங்கி விட்டது. அதே போல் பொதுமக்களிடம் எந்த ஒரு திட்டத்துக்கும் ஆதார் அட்டை நகலை கட்டாயப்படுத்தி வாங்க கூடாது என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து துறைகளும் பொதுமக்களிடம் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருகிறது.

ஆதார் எண்ணை கேட்கவும், இணைக்கவும் வற்புறுத்தக்கூடாது என்று கூறி வரும் நிலையில் மின்வாரியம் சார்பில் மின்அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க இந்த மாதம் இறுதிவரை காலக்கெடு விடுத்துள்ளது. இது போன்று அடுத்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு துறைகள் சார்பில் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்த வாய்ப்பு இருக்கிறது. தனிநபர் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குவியும் போது தவறு நடக்க பல வாய்ப்புகள் உள்ளது. தற்போது மருத்துவமனையில் கூட ஆதார் எண் கேட்கும் சூழ்நிலை உருவாகிறது. தனிநபரின் சிகிச்சை விவரம் கூட இன்னொருவர் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ரகசிய என்று ஒன்றும் இல்லாத நிலை இனி ஆகிவிடும். ஆதலால் மத்திய, மாநில அரசுகள் எந்த நலத்திட்ட உதவிகளுக்கும், சலுகைகள் வழங்கவும், மானியங்கள் கொடுக்கவும் ஆதார் எண்ணை கேட்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வரவேற்பு

வத்திராயிருப்பு ஆசிரியர் ஜெயபிரகாஷ்:-

அரசின் உத்தரவு படித்தவர்களுக்கு சட்டென்று புரிந்து விடுகிறது. அவர்கள் உடனே செயல்படுத்தி விடுகிறார்கள். ஆனால் பாமர மக்கள் பரிதவிக்கும் நிலைதான் ஏற்படுகிறது. நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் சென்றடைய வேண்டும் என்ற அரசின் நோக்கம் முழுவதும் வெற்றி பெறும். எனவே ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு வரவேற்க கூடியது ஆகும்.

நல்ல வாய்ப்பு

பாண்டியன் நகர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் தாய் செல்வம்:

தமிழக அரசு அரசின் சலுகைகள், நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவித்துள்ளது. ஏற்கனவே மின் இணைப்புக்கு ஆதார் எண் தேவை என அறிவிக்கப்பட்டதால் எண்ணற்ற பேர் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். எனவே தற்போதைய சூழலில் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமாகிறது. ஒவ்வொரு அரசு உதவிகளை பெறுவதற்கும் வெவ்வேறு ஆவணங்களை கொண்டு செல்வதை விட ஆதார் எண்ணை அளிப்பது என்பது விண்ணப்பதாரருக்கும் எளிதானதாகும். எனவே இந்த உத்தரவு வரவேற்புக்குரியது. இதனால் அனைவரும் ஆதார் எண் பெறுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

முக்கியத்துவம்

இல்லத்தரசி கார்த்திகைச்செல்வி:-

ஆதார் அட்டை பெற வேண்டும் என்று அனைவரும் கூறும் போது அதன் முக்கியத்துவம் தெரியாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு கட்டமாக பல்வேறு நிலைகளில் ஆதார் எண் அவசியம் என்ற சூழல் ஏற்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்த போது பலரும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனாலும் அனைவரும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

ஆதார் எண் தான் நம்மை அடையாளம் காட்டும் எண்ணாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் அரசு அறிவிப்பு வரவேற்கத்தக்கது தான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசின் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சிரமம் இன்றி அதுகிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், செல்போன் மாற்றம் போன்றவைகளுக்காக மக்கள் அலைகழிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

அதேபோன்று வாக்காளர் அடையாள அட்டை எண், நலத்திட்டங்களுக்கு என்று தனித்தனியாக ஆதார் இணைப்பை செயல்படுத்தாமல் அதனை ஒரே குடையின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.


Next Story