ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா?


ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா?
x

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கரூர்

காகித பணம்

பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.

அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.

ரூபாய் நோட்டுகள்

இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.

இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.

லட்சுமி, விநாயகர் உருவப்படம்

இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-

திசை திருப்பும் செயல்

கரூரை சேர்ந்த மர அறுவை மில் உரிமையாளர் ரமேஷ்:-

ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்து செல்லுதல் மற்றும் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது உள்ளிட்டவற்றில் ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில் தற்போது டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை முறை பெரும்பாலான கிராமப்பகுதிகளில் கூட பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என குறிப்பிடுவது ெபாதுமக்களை திசை திருப்பும் செயலாக உள்ளது. இதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வழி வகைகளையும், அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது சந்திக்கும் சிரமங்களையும் போக்க அரசு நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போதுள்ள நடைமுறையே சிறந்தது

தனியார் கல்லூரி முதல்வர் இருளப்பன்:-

இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதங்களை உள்ளடக்கிய வேற்றுமையில், ஒற்றுமை காணும் நாடாகும். இந்நிலையில் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி படங்களை அச்சிடுவது நன்மையை தரும் என்றாலும், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு இடையூறு வராத வண்ணம் இருக்க வேண்டும். ரூபாய் நோட்டில் இந்து கடவுள்களின் படங்களை அச்சிடுவது தனிப்பட்ட ஒரு மாநிலத்திற்கு மட்டும் உரியது அல்ல இந்திய நாட்டிற்கே பொதுவானது. அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வசித்து வரும் சூழ்நிலையில் தற்போது உள்ள நடைமுறையை பின்பற்றுவதே சிறந்தது.

ஏற்றுக் கொள்ள கூடாது

வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபியை சேர்ந்த பூபதி:- மதச்சார்பற்ற நம் நாட்டில் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து மதத்தினரின் உழைப்பும், வரியும் தான் உதவி செய்கிறது. எனவே இந்த யோசனையை ஏற்றுக் கொள்ள கூடாது. ஒருவேளை இதை ஏற்றுக் கொண்டால் மற்ற மதத்தினரும் தங்களுடைய அடையாளங்களை ரூபாய் நோட்டில் பதிவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுவர். மேலும் இந்துக்கள் புனிதமாக மதிக்கும் விநாயகர், லட்சுமி ஆகிய படங்கள் பூஜை அறையில் மட்டும் வைத்து வழிபட வேண்டிய ஒன்று. அதை கண்டிப்பாக ரூபாய் நோட்டில் அச்சிடக்கூடாது.

சர்ச்சைக்குரிய விஷயமாகும்

குளித்தலையை சேர்ந்த சோபியா:-

இந்து கடவுள்களின் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவதால் அந்த ரூபாய் நோட்டுகள் இந்துக்கள் மட்டும் பயன்படுத்துவதில்லை. அனைத்து மதத்தினருமே அதை பயன்படுத்துகின்றனர். இதனால் மற்ற மதத்தினரிடையே இது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக கருதப்படும். எனவே எந்தவித சர்ச்சைகளுக்கும் உள்ளாகாமல் இருக்க பழைய முறையையே பின்பற்றலாம்.

பிரச்சினை செய்வார்கள்

நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியைச் சேர்ந்த பால்காரர் நந்தகுமார்:-

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட கடவுள்கள் படம் அச்சிட வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியிருப்பது நகைச்சுவையாக உள்ளது. மத்திய அரசின் ரிசர்வ் வங்கி சார்பில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசாங்க சின்னம் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கடவுள் படங்கள் நோட்டுகளில் இருக்கக் கூடாது. எனவே அரசுக்கு சொந்தமான ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் மற்றும் எந்த படமும் பிரிண்ட் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களும் அந்த மதத்தின் கடவுள்களின் படங்களை ரூபாய் நோட்டுகளில் வைக்கச்சொல்லி பிரச்சினைகள் செய்வார்கள்.எனவே ரூபாய் நோட்டுகளில் எந்த ஒரு கடவுள் படங்களும் வைக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story