ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா? மக்கள் கருத்து


ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா? மக்கள் கருத்து
x

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.

அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.

ரூபாய் நோட்டுகள்

இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.

இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.

லட்சுமி, விநாயகர் உருவப்படம்

இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.



இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-

மக்களை குழப்ப வேண்டாம்

பொருளாதாரத்துறை பேராசிரியர் ஈஸ்வரி ரமேஷ்:-



ரூபாய் நோட்டுகள்தான் பொருளாதார நிலையை காட்டுகிறது. அதில் இதுபோல் சாமி உருவங்களை அச்சிடுவதால் என்ன மாற்றங்கள் நிகழப்போகிறது?. சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அதை பற்றி யோசிக்கலாம். இந்த நடவடிக்கை கள்ள நோட்டு புழக்கத்தை அதிகரிக்க செய்யும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மதசார்பற்ற நாட்டில் நாம் வாழுகிறோம். வறுமையில் உள்ள நாடாக நாம் இருக்கிறோம். அதற்கு நல் யோசனைகளை வழங்கலாம். இந்த விஷயத்தில் மக்களை குழப்ப வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் காந்தியின் உருவப்படமே ரூபாய் நோட்டுகளில் இருந்தால் போதும். அவருடைய படம் இருந்தால்தான் அது சரியாக இருக்கும்.

தேனாம்பேட்டையை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஸ்டெல்லா மேரி:-


அரவிந்த கெஜ்ரிவால் படித்தவர். பண்பாளர். விவரம் தெரிந்தவர். அவருடைய நடவடிக்கைகளை இந்திய மக்கள் அனைவரும் பார்க்கத்தான் செய்கிறார்கள். அவர் எதை செய்தாலும் அதில் ஒரு நோக்கம் இருக்கும். அந்த வகையில்தான் இந்த முயற்சியையும் நாங்கள் பார்க்கிறோம். காரணம், ரூபாய் நோட்டில் சாவர்கர் படத்தை பா.ஜ.க.வினர் அச்சடிக்க வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனை தடுக்கும் நோக்கில்தான் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவர் சொன்னதற்காக இப்போதைய ஆட்சியாளர்கள் உடனே செய்துவிடவா போகிறார்கள்?. இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் பொதுவானவர். நல்ல தலைவர்.

உள்நோக்கத்துடன் சொல்லியிருக்கலாம்


பொருளாதார விமர்சகர் சோம.வள்ளியப்பன்:-



பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்பெருக்கத்துக்கும், லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்பிக்கை ரீதியில் அவர் சொல்லியிருக்கலாம். அரவிந்த கெஜ்ரிவால் நன்கு படித்தவர். அவர் வேறு ஒரு உள்நோக்கத்துக்காக தான் இதை சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். உலகத்தில் முன்னேறிய நாடுகள்கூட இப்படி முயற்சித்தது கிடையாது. மதிப்புமிக்க, வணங்கக்கூடிய இறைவனை இப்படி பயன்படுத்துவது சரியாக இருக்காது. மற்ற மதத்தினரும், இப்படி தங்கள் கடவுளை அச்சிடச் சொன்னால் என்ன செய்வார்கள்?. வாக்கு வங்கி அரசியலுக்காக இதை செய்வதாகவே நான் கருதுகிறேன். இதன்மூலம் வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அதுவும் நடக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.

சவுகார்ப்பேட்டையை சேர்ந்த பிரியங்கா:-



கடவுளின் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கக்கூடாது. நாங்கள் அதற்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கடவுள் பிரார்த்தனை என்பது உணர்வுப்பூர்வமானது. அதனால் கடவுளின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்கலாம் என்பது சாத்தியமற்றது. கடவுளின் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடிப்பது, கடவுளை காயப்படுத்துவது போன்றது. எனவே ரூபாய் நோட்டுகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இப்போது இருப்பது போன்றே தொடரலாம் என்பது எனது கருத்து.

அவசியம் இல்லாத ஒன்று

வேப்பேரியை சேர்ந்த ரீட்டா ஜெயின்:-



ரூபாய் நோட்டு ஒரு மதத்தை சார்ந்தது அல்ல. அதில் பொதுவான ஒரு படம் இருப்பதுதான் நல்லது. அந்த வகையில் ஏற்கனவே காந்தியின் உருவப்படம் இருப்பதே போதுமானது. பணம் எல்லா இடத்திலும் உபயோகப்படுத்தப்படும். அப்படி இருக்கும்போது, ரூபாய் நோட்டில் சாமி படம் என்று வந்தால், அது சரியாக இருக்காது. ஒற்றுமையாக வாழும் நம்முடைய நாட்டில் இது மத பிரச்சினையை எழுப்பும். ஒற்றுமையை சீர்குலைக்கும். எனவே இது அவசியம் இல்லாத ஒன்று.

வில்லிவாக்கத்தை சேர்ந்த சரத்:-



ரூபாய் நோட்டுகளில் யாருடைய படத்தையும் அச்சிடவேண்டாம். தற்போதைய டிஜிட்டல் உலகில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருகிறது. பெரும்பாலும் செல்போன் வாயிலான பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துவிட்டன. இப்படி இருக்கும் சூழ்நிலையில், 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டுகளை மாற்றி அமைத்தால், பணப்பதுக்கல் இருக்காது. ரூபாய் நோட்டுகள் தேவைக்கேற்றாற்போல் அச்சிட்டால் போதும். அப்படி செய்யும்போது, யாருடைய உருவப்படம் வைக்க வேண்டும் என்ற விவாதமே வராது.

மேலும் சிலர் கூறுகையில், 'ஏற்கனவே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், வீட்டில் விளக்கு (லைட்) எரியவிட்ட பிறகும் ரூபாயை கொடுப்பதற்கு தயங்குவார்கள். அப்படி இருக்கும்போது, ரூபாய் நோட்டுகளில் லட்சுமி படத்தை அச்சிட்டால், பலரின் மனநிலையை சொல்லவா வேண்டும்?' என்றனர்.


Next Story