மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?


மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?
x

“என்னிடம் நீ தலைகுனிந்து படித்தால், உன்னை தலைநிமிரச் செய்வேன்'', இதுதான் நூலகம் நமக்குச் சொல்லும் அறிவுரை.

அரியலூர்

வாசிக்கும் பழக்கம்

புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன. அற்புதம் நிறைந்த புத்தகங்களை நூலகங்கள் போய் வாசிக்கும் பழக்கம் சமீபகாலமாக அருகி வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு தூபமிடுகிறது. இருப்பினும் வாசிப்பை நேசிப்பவர்கள், இன்றும் நூலகத்தை நோக்கி நடைபோட்டு, புத்தகங்களை தேடிதேடிப் படிக்கத்தான் செய்கின்றனர். புத்தக கண்காட்சிகளில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்கிறார்கள்.

நூலக வகுப்பு

குழந்தைப் பருவம் முதல் புத்தக வாசிப்புத்திறனை ஏற்படுத்த, பள்ளிக்கூட கல்வியில் இருந்தே ஊக்கப்படுத்தப்படுகிறது. அதற்காக பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் 40 பாட வகுப்புகளில், புத்தகங்களை தேடிப்படிப்பதற்காக ஒரு பாடவகுப்பு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகுப்புகளில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல், தனிமனிதர்கள், சிந்தனைகளை தூண்டும் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க வைத்து, அதன் வாயிலாக வினாக்கள் கேட்டு விடையளிப்பது, கலந்துரையாடுவது போன்றவை நடத்தப்படுகின்றன. இதுதவிர போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களை உத்வேகப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன.

கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு படிக்கிறார்களா? நூலகப்பாடவகுப்புகள் பள்ளிக்கூடங்களில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது இருக்கிறது. பல பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கண்காட்சியாகவே இருக்கின்றன என்ற புகார்களும் வருகின்றன.

புத்தக வாசிப்பு அவசியம்

பள்ளிகளை போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் நேரத்தை செலவிடும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களை தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கியிருக்கும் யோசனைகள் வருமாறு:-

விளையாட்டு

அரியலூர் மாவட்டம் தா.பழூரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி:- எங்கள் பள்ளியில் நூலகத்திற்கென்று தனி வகுப்புகள் எதுவும் நடைபெறுவதில்லை. எங்களுக்கு வாரம் முழுவதும் உள்ள பாட அட்டவணைகளில் நூலகத்திற்கான நேரம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் விளையாட்டு வகுப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஆசிரியர்கள் எங்களை விளையாட அனுமதிக்கிறார்கள். அதுபோல் நூலகத்திற்கான வகுப்பு குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒரு வகுப்பாவது இருந்தால் அந்த நேரத்தில் நூலகத்தை பயன்படுத்த கற்றுக் கொள்வோம்.

மன அழுத்தம் நீங்குகிறது

நூலக பொறுப்பாசிரியர் எட்வின் கென்னடி:- அயன் ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 129 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மாணவர்களுக்கு நூல்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் புதினங்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள், பல்வேறு கலைக்களஞ்சியங்கள் வரலாறு, அறிவியல் படைப்புகளை மாணவர்கள் பயன்படுத்த நூலக பாடவேளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வாரந்தோறும் வெவ்வேறு புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று படிக்க கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளபடி மாணவர்கள் பயின்ற புத்தகங்களைப்பற்றி பேச்சு போட்டி நடத்தி மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இதன்மூலம் மாணவர்கள் புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி நன்கு உணர்ந்து கொள்வதுடன் சிந்தனைத்திறன், சீர்தூக்கிபார்த்தல், நாட்டுநடப்புகள், உலக நடப்புகள், உலக பொருளாதாரம், அறிவியல் கண்டுபிடிப்புகள், விளையாட்டு செய்திகள், பல்துறை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்கின்றனர். நூலக பாடவேளை மாணவர்களின் மன அழுத்தம் நீங்கி புத்துணர்வுடன் கற்க பெரிதும் பயன்படுகிறது.

ஆளுமை திறன்

அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி:- அரியலூர் மாவட்டத்தில் 115 அரசு பள்ளிகளும், 15 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் அரசு கூறியவாறு மாணவர்களுக்கு நூலகங்களுக்கு சென்று படிக்கவும், நூல்களை வீடுகளுக்கு எடுத்து சென்றும் வருகின்றனர். தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டங்கள் நடக்கும் போதும் நூலகங்கள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது. நூல்கள் குறித்து வட்டார அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுகிறது. ஆளுமை திறனும் வழங்கப்படுகிறது.

சவால்

பொதுநூலக இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இளம்பகவத்:- 'புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை போட்டி மூலம் தேர்வு செய்து, அவர்களை தேசிய அளவில், சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறோம். அரசு புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு ஆர்வம் சற்று மேம்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்த பணியை திறம்பட கொண்டு செல்வது ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. டிஜிட்டல் மூலம் பார்ப்பது சுலபம். ஆனால் அதிலும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அரசின் வாசிப்பு இயக்கம் தொடர் நிகழ்வாக இருக்கும்'. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

எளிய நடையில் கதை புத்தகங்கள்

பள்ளி குழந்தைகள் எளிமையாக படிக்கும் வகையில், கதைகள் அடங்கிய புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த புத்தகங்களில் நிறையப் படங்கள், எளிய வார்த்தைகள் இடம்பெற்று இருக்கும் என்றும், 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் அதை பார்த்து, படித்து, கருத்துள்ள கதையை புரிந்து கொள்ளும்படியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளன என்றும் அவர்கள் கூறினர். குழந்தை எழுத்தாளர்கள், விருப்பமுள்ள ஆசிரியர்கள் இதில் அந்த கருத்துள்ள கதைகளை எழுதுவதற்கு ஏற்றவாறு ஏற்பாடு நடந்து வருகிறது. வாசிப்பு இயக்ககம் மூலம் இந்தப் புத்தகங்களை பிரபலப்படுத்தவும், அனைத்து பள்ளி நூலகங்களிலும் இந்த புத்தகங்களை இடம்பெறச் செய்யவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


Related Tags :
Next Story