விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில், களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே சிலைகளை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கப்பட்ட சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் உண்டான சிலைகளை மட்டுமே தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மட்காத ரசாயன சாயம் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலையின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை அழகுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story