குமரி மாவட்டத்தில் கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட தடை


குமரி மாவட்டத்தில் கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட தடை
x

குமரி மாவட்டத்தில் கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நாகா்கோவில்,

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

அவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும், கோவில்கள், ஆலயங்களிலும் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதே சமயம் தீவிர வாகன சோதனையும், கடற்கரை மற்றும் மலை பகுதிகளில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள லாட்ஜுகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்களின் பாதுகாப்பை கருதி கடலில் இறங்கவோ, மலை பகுதிகளில் கொண்டாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ரேஸ் டிரைவிங், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தல் கூடாது. இதனை மீறி செயல்பட்டால் வாகனம் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொண்டாட்டத்தின் போது பெற்றோர் தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். நகைகளை வெளியே அணிந்து வரக் கூடாது. கோவில்கள் மற்றும் ஆலயங்களில் ஒலிப்பெருக்கி மூலம் வெளிவரும் ஒலியின் அளவு அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். குமரியில் 18 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story