கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு


கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
x

கோவை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கிய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை, ஜூன்.15-

கோவை தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கிய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

தாக்குதல்

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் எல்லன் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரன் (வயது 75). கடந்த 2017-ம் ஆண்டு இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார். இதையடுத்து இந்த ஆஸ்பத்திரி சென்னை மருத்துவமனை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மருத்துவமனைக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி மருத்துவமனையை சூறையாடினர்.

மேலும் அந்த மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வந்த உள்நோயாளிகளை அந்த கும்பல் வலுக்கட்டாயமாக மருத்துவமனையை விட்டு வெளியே அனுப்பியதாக தெரிகிறது. மேலும் அங்கு பணியில் இருந்த நர்ஸ்கள், ஊழியர்களை அந்த கும்பல் மிரட்டி சென்றனர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே மருத்துவமனையை வாடகைக்கு எடுத்து டாக்டர் உமா சங்கர் தனக்கு ரூ.4 கோடியே 95 லட்சம் வாடகை தராமல் ஏமாற்றியதாகவும், ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவமனையை உமாசங்கர் மற்றும் அவருடைய மேலாளர் மருதவான் ஆகியோர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ராமச்சந்திரன் புகார் அளித்தார். இதனிடையே உமாசங்கர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கை அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தியதில், மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது டாக்டர்கள் ராமச்சந்திரன், காமராஜ், ராமச்சந்திரனின் உதவியாளர் முருகேஷ், மூர்த்தி கார் டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரும் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

காவலில் எடுத்து விசாரிக்க மனு

இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டாக்டர்கள் ராமச்சந்திரன், காமராஜ் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர்கள் 5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்?, மேலும் விபத்தில் இறந்த டாக்டர் உமாசங்கர் மீது பொய் புகார் அளிக்க போலீஸ் அதிகாரிகள் யாரும் உதவி செய்தார்களா? என்பது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.


Next Story