காவிரி ஆற்றில் மூழ்கி பலியான ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உடல்கள் மீட்பு


காவிரி ஆற்றில் மூழ்கி பலியான ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கரூர்

கிடா விருந்து

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் திவாகர் (வயது 25). இவர் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே கடம்பங்குறிச்சியில் உள்ள குலதெய்வமான பவுளியம்மன் கோவிலில் கிடா விருந்து வைத்திருந்தார். இதில் திவாகரின் நண்பர்களான கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் விஷ்ணு (25), கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த ஆதர்ஷ் (25) மற்றும் கோவையை சேர்ந்த சங்கர், நவீன்குமார், அஜித் ஆகிய 5 பேர் கலந்து கொள்ள கடம்பங்குறிச்சிக்கு வந்தனர்.

இவர்கள் நேற்று முன்தினம் மதியம் கடம்பங்குறிச்சி காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். காவிரி ஆற்றில் தற்போது அதிகப்படியான தண்ணீர் செல்லும் நிலையில் ஆழமான பகுதியில் இறங்கிய ஆதர்ஷை தண்ணீர் இழுத்து சென்றது.

தேடுதல் வேட்டை

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு அவரை காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கியபோது அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் பீதியடைந்த நண்பர்கள் இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களையும் காவிரி ஆற்றில் இரவு முழுவதும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என கருதப்பட்டது. இதற்கிடையே போதிய வெளிச்சம் இல்லாததால் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

உடல்கள் மீட்பு

இந்தநிலையில் நேற்று காலை 5.30 மணி முதல் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றின் பகுதிகளில் தேடினர். அப்போது காவிரி கரையோரம் இருந்த முள் செடியில் விஷ்ணு உடல் சிக்கி மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து, அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்று படுகைக்கு கொண்டு வந்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நன்னியூர் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் ஆதர்ஷ் உடல் மிதந்து கொண்டிருந்தது. அதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் அவருடைய உடலை மீட்டு வாங்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணணிடம் ஒப்படைத்தனர். பின்னர் 2 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story