'எல்லாம் அரசியல் ஸ்டண்ட்.. அவ்வளவு தான்' - அண்ணாமலை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்


எல்லாம் அரசியல் ஸ்டண்ட்.. அவ்வளவு தான் - அண்ணாமலை குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்
x

காவிரி-குண்டாறு இணைப்பு நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்,

திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட சொத்து, ஊழல் பட்டியல் குறித்து வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் உள்ள பெரும் தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதை நான் பார்க்கவில்லை, எனக்கு அது தெரியாது. இதெல்லாம் எல்லாம் அரசியல் ஸ்டண்ட். அரசியலுக்காக அவர் செய்கிறார். அவ்வளவு தான்.

காவிரி-குண்டாறு இணைப்பை நாங்கள் தான் செய்து வருகிறோம். வெளிநாட்டில் நிதி வாங்கி பணிகளை செய்து வருகிறோம். தற்போது கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story