சர்வதேச கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு- போலீசார் பரபரப்பு தகவல்


சர்வதேச கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு- போலீசார் பரபரப்பு தகவல்
x

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை,

டெல்லியில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டு படையினருக்கு உளவு தகவல் தெரிய வந்தது. 4 மாதங்களாக நடந்த தொடர் விசாரணையில், டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், 3 பேரும் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இதுபோன்று 45 முறை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை, ரூ.2 ஆயிரம் கோடி சர்வதேச சந்தை மதிப்பு கொண்ட 3,500 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் கடத்தப்பட்டு உள்ளன.

இந்த 3 பேர் கும்பலை பின்புலத்தில் இருந்து இயக்கியவர் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் விசாரணையின் முடிவில், திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அரசியல் பிரமுகரான அவருக்கு, டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜராகும்படி, சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார். இதனால், சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். அவருடைய வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.ஜாபர் சாதிக் அரசியல், திரையுலக பிரமுகர்கள் மற்றும் பிற பிரபல நபர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. இது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

சர்வேதச கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு உள்ளது. நியூசிலாந்து , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்த்த போதைப்பொருள் கும்பலுடன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு உள்ளது. ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார்.

உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். போதைப்பொருள் கடத்தலில் ஈட்டிய பலகோடி ரூபாய் பணத்தை ஜாபர் சாதிக் சினிமாவில் முதலீடு செய்துள்ளார்.அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.என தெரிவித்தார்


Next Story