நகை, பணம் பறித்த 2 பேருக்கு சிறை தண்டனை


நகை, பணம் பறித்த 2 பேருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 27 Sep 2022 6:45 PM GMT (Updated: 27 Sep 2022 6:46 PM GMT)

லிப்ட் தருவதாக கூறி வாலிபரிடம் நகை, பணம் பறித்த 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு வந்து இண்டூர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது நள்ளிரவு நேரம் ஆகிவிட்டதால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் லிப்ட் தருவதாக கூறி செந்தில்முருகனை அழைத்து சென்றனர். பைபாஸ் மேம்பாலம் அருகே அவரை தாக்கி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்று விட்டனர்.

இது தொடர்பாக செந்தில் முருகன் கொடுத்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழிப்பறி திருட்டில் ஈடுபட்ட தர்மபுரியை சேர்ந்த வினோத் (25), கல்லாவியை சேர்ந்த சிலம்பரசன் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவில் இவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து வினோத்துக்கு 8 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், சிலம்பரசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story