தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு


தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சுதா (வயது 52). இவர் விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மாலை பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு அலுவலகத்தை பூட்டிவிட்டு சாவியை, தந்தை பெரியார் நகர் காவிரி சதுக்கம் பகுதியில் உள்ள அந்நிறுவன உரிமையாளர் வீட்டில் கொடுப்பதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

நகை பறிப்பு

அப்போது அவரை பின்தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் சுதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர்.

உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2¼ லட்சமாகும்.

வாலிபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சுதா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story