கரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு


கரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள் திருட்டு
x

கரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகைகள் திருடப்பட்டுள்ளது. தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கரூர்

நகைகள் திருட்டு

கரூர் அருகே உள்ள வடக்கு காந்திகிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரெங்கன் (வயது 55). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும், வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம், தங்க சங்கிலி, மூக்குத்தி உள்ளிட்ட 4¾ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ரெங்கன் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் தங்க நகைகளை திருடி சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கரூர் மாநகர பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி திருட்டு கும்பலை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story