சிதம்பரத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.11 லட்சம் நகைகள் கொள்ளை


சிதம்பரத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.11 லட்சம் நகைகள் கொள்ளை
x

சிதம்பரத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.11 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் ராஜகோபால் மோகன் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 52). இவர் வைப்பு சாவடியில் மளிகை கடை நடத்தி வருகிறார். குப்புசாமி தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி தில்லையம்மாளுடன் கடைக்கு சென்றார்.

பின்னர் இருவரும் மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரும் வீட்டின் அறைக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.

பீரோவில் வைத்திருந்த 27 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

கடப்பாரையால் உடைத்து...

பின்னர் இதுபற்றி குப்புசாமி அண்ணாமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து வீட்டுக்குள் புகுந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.11 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story