உதவித்தொகை வாங்கி தருவதாக கூறிபெண்ணிடம் நகை அபேஸ்


உதவித்தொகை வாங்கி தருவதாக கூறிபெண்ணிடம் நகை அபேஸ்
x

தம்மம்பட்டியில் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம், டிப்-டாப் ஆடை அணிந்து வந்த ஜோடி கைவரிசை காட்டி சென்றுள்ளது.

சேலம்

தம்மம்பட்டி

உதவித்தொகை

தம்மம்பட்டி பேரூராட்சி 11-வது வார்டில் வசிப்பவர் செல்லம்மாள் (வயது 70). சம்பவத்தன்று டிப்டாப்பாக உடை அணிந்த ஆணும், பெண்ணும் செல்லம்மாள் வீட்டுக்கு வந்தனர். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த அவர்கள், விதவை உதவித்தொகை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

அதற்காக போட்டோ எடுக்க வேண்டும். அப்போது கழுத்தில் நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை தர மாட்டார்கள். எனவே நகையை கழற்றி வைத்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். செல்லம்மாளும் நகையை கழற்றி உள்ளார். உடனே அவர்கள், செல்லம்மாள் தலையில் கையை வைத்து நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் செல்லம்மாள் மயங்கி விழுந்தார்.

போலீஸ் வலைவீசு்சு

உடனே அந்த டிப்-டாப் ஜோடி அங்கிருந்து நைசாக தப்பி சென்றது. சிறிது நேரம் கழித்து சுய நினைவுக்கு வந்த செல்லம்மாள், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். நடந்த சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்லம்மாளிடம் இருந்து மர்ம ஜோடி அபேஸ் செய்து சென்ற நகை 2 பவுன் தங்க சங்கிலி என கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story