சாமிதோப்பில் வைகாசி திருவிழா: அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை;திரளான பக்தர்கள் பங்கேற்பு


சாமிதோப்பில் வைகாசி திருவிழா: அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை;திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Jun 2023 6:45 PM GMT (Updated: 2 Jun 2023 6:45 PM GMT)

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று வைகாசி திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று வைகாசி திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

வைகாசி திருவிழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

8-ம் திருவிழாவான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல் நிகழ்ச்சியும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு வாகன பவனியும், மதியம் 1 மணிக்கு உச்சிப்படிப்பும், சிறப்பு பணிவிடையும், அன்னதர்மமும் நடைபெற்றது.

கலிவேட்டை நிகழ்ச்சி

மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து முத்திரி கிணற்றங்கரையில் 5 முறை சுற்றியபடி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அங்கு திரளாக கூடியிருந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகர அரகரா என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். கலிவேட்டை முடிந்தவுடன் அய்யா வைகுண்டசாமி சாமித்தோப்பு சுற்றுவட்டார கிராமங்களான செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, சோட்ட பணிக்கன் தேரிவிளை உள்பட ஏழு கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செல்லும் வழியில் பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், பூ, பன்னீர் போன்றவற்றை சுருளாக வைத்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வடக்கு வாசலில் தவக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

5-ந் தேதி தேரோட்டம்

9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் திருவிழாவான நாளை இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

5-ந் தேதி அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு, மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதர்மமும் வழங்கப்படுகிறது.


Next Story