கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்


கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்
x

கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 17-ந்தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இவ்வழக்கில் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் வழக்கமான பணிகளுக்கு சென்றவர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறியிருந்தனர். இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் கிராம பொதுமக்கள் சென்னைக்கு வந்து டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாகவும் புகார் மனுவும் கொடுத்திருந்தனர்.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அப்பாவிகள் கைது செய்யபப்ட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி வழக்கில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி ஐகோர்ட்டு நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் இன்று விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வேறு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story