தனியார்-அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா


தனியார்-அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா
x

தனியார்-அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கரூர்

கொங்கு மேல்நிலைப்பள்ளி

கரூர் கொங்கு மேல்நிலைப்பள்ளி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்விசார் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கரூர், கோவை ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கொங்கு அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அறக்கட்டளை செயலாளர் விச.மா.சண்முகம், துணைத்தலைவர் அம்மையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் கோவை ரோடு வழியாக பஸ் நிலையம், ஜவகர் பஜார் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று சி.எஸ்.ஐ. விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். பள்ளி தாளாளர் பாலுகுருசுவாமி வரவேற்று பேசினர். இதில், பிரேம் டெக்ஸ் வீரப்பன், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி

கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பிரிகே.ஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு மாணவர்கள் காமராஜர் பாடலை பாடி விழாவை தொடங்கி வைத்தனர். மேலும் பள்ளியில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, மாறுவேடம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பிரிவு வாரியாக 3 பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பள்ளி தாளாளர் ஆர்த்தி ஆர்.சாமிநாதன் பரிசுகள் வழங்கினார். பள்ளி ஆலோசகர் பி.பழனியப்பன், முதல்வர் டி.பிரகாசம் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

அரசு பள்ளிகள்

இதேபோல் தொட்டியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ேநற்று காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி மாணவ-மாணவிகள் காமராஜர் வேடமிட்டுபள்ளிக்கு வந்திருந்தனர். இதையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் கரூர் ஆண்டாங்கோவில் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் தோகைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளிகளிலும் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு ேபச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story