காஞ்சீபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


காஞ்சீபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.

காஞ்சிபுரம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

காஞ்சீபுரம் மாவட்டம் 169 துணை சுகாதார நிலையங்கள் 18 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், 3 அரசு ஆஸ்பத்திரிகள், மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி போன்றவை உள்ளடக்கிய சுகாதார கட்டமைப்பை கொண்டுள்ளது.

இந்த சுகாதார கட்டமைப்பு மேலும் வலுப்பெறும் வகையிலும், மக்கள் அதிக பயன்பெறும் வகையிலும் உருவாக்க நமது தமிழ்நாடு முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டதே மாவட்ட சுகாதார பேரவை ஆகும். மாவட்ட சுகாதார பேரவையின் முக்கிய நோக்கமே வட்டாரங்கள் உள்ள சுகாதார கட்டமைப்பை சீரமைப்பது மற்றும் வலுப்படுத்துவது ஆகும்.

இதன் அடிப்படையில் வட்டாரங்கள் தோறும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சுகாதார பணியாளர், தோழமை துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களிடம் கலந்து ஆலோசித்து சுகாதார கட்டமைப்புக்கு தேவையான, புதிய துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டிட வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதி மற்றும் மருத்துவ, உபகரணங்கள் போன்றவற்றின் தேவைகளை ஆராய்ந்து அதனை மாவட்ட அளவில், மாவட்ட சுகாதார பேரவையின் தீர்மான ஒப்புதலுடன் இயக்குநரகத்திற்கு பரிந்துரைக்கபடும்.

மாவட்ட சுகாதார பேரவையின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தீமானங்கள் மாநில அளவிலிருந்து பகுப்பாய்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்படும். இதன் மூலம் நமது மாவட்டத்திற்கு தேவையான சுகாதார வசதிகள் நிறைவேற்றுவதன் மூலம் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர்கள், ஆகியோர்களின் வட்டார அளவிலான தீர்மானங்கள் விவாதிக்கபட்டது.

மேலும் வளரிலம் பருவத்தினருக்கு இளம் வயது குழந்தை பேறு, ரத்த சோகையினால் ஏற்படும் நோய்களை தடுத்திடவும், விரிவான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களை ஊக்குவித்து. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களை அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை ஆ.மனோகரன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சீபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) மலர்விழி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பாபிரியாராஜ் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story