மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த கனியாமூர் பள்ளி விடுதிக்கு அனுமதி பெறவில்லை அதிர்ச்சி தகவல்


மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த  கனியாமூர் பள்ளி விடுதிக்கு அனுமதி பெறவில்லை  அதிர்ச்சி தகவல்
x

மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி(வயது 17). இவர் கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தாலும், மாணவியின் பெற்றோர் தரப்பில் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது.

புலனாய்வு குழு விசாரணை

இதை தொடர்ந்து மாணவி மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரத்தின் பின்னணி தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மாணவி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கானூங்கோ ஏற்கனவே தெரிவித்து இருந்தார். மேலும் அவர் விசாரணை நடத்த வருகிற 27-ந்தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகிறார்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

இந்த சூழ்நிலையில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோரை சந்தித்து பேசினர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இளையராஜா, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 3 மணி நேரம் தீவிர விசாரணை செய்தனர்.

அப்போது, பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, விடுதியில் தங்கி படித்தவர்களின் விவரம், அந்த விடுதி அனுமதி பெற்று இயங்கியதா?, போதுமான பாதுகாப்பு வசதி உள்ளதா? என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தினர்.

விடுதிக்கு அனுமதி பெறவில்லை

பின்னர் ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், இந்த பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி நடத்த அனுமதி பெறவில்லை. இந்த விடுதியில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர். முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவி ஸ்ரீமதிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும்.

அனுமதி பெறாமல் விடுதி நடத்தி இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இது மாணவி இறப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் சேர்க்கப்படும்.

இங்கு ஏற்கனவே இருந்த கலெக்டர் ஸ்ரீதர், கடந்த 3 மாதத்துக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் மாணவிகள் விடுதி நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவிகள் விடுதி நடத்த அனுமதி பெறவில்லை.

தமிழ்நாட்டில் எவ்வளவோ குழந்தைகள், மாணவிகள் விடுதி இதுபோன்று பதிவு செய்யப்படாமல் இயங்கி வருகிறது. இவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.

அடுத்தகட்டமாக 27-ந்தேதி விசாரணை

அடுத்தகட்டமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீமதியை கொண்டு வந்த போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், முதலாவதாக பிரேத பரிசோதனை செய்த டாக்டர், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் வருகிற 27-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடலை வாங்க முன்வரவில்லை

மாணவி ஸ்ரீமதி் மரணமடைந்து நேற்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், அவரது உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் இன்னும் முன்வராமல் இருந்து வருகிறார்கள்.

இதுபோன்ற நிலையில், மாணவி தங்கி படித்த விடுதிக்கு இதுவரையில் அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி இருப்பது இந்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


Next Story