கார்த்திகை தீபத்திருவிழா: காவல்துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு


கார்த்திகை தீபத்திருவிழா: காவல்துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2023 2:59 AM GMT (Updated: 26 Nov 2023 3:27 AM GMT)

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தைக் காண நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு வருவோர் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள காவல்துறை சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 044-28447703, 044-28447701, 8939686742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக 9342116232, 8438208003 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story