கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலையில் மலையேற 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி


கார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலையில் மலையேற 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24-ம்தேதி தொடங்குகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 24-ம்தேதி தொடங்குகிறது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில், கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெறும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, பஞ்ச ரதங்களின் மகா தேரோட்டம், கொடியேற்றத்துக்கு பிறகு வரும் 7-ம் நாள் உற்சவத்தில் நடைபெறவுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறவுள்ளது. 2,668 அடி உயரம் உள்ள, மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக, கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பா.முருகேஷ் பேசியதாவது:-

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில், அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீபத் திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

கோயில் வளாகம் மற்றும் கிரிவல பாதையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 2 ஆண்டுகளாக 5 தேர்களும் இயக்கப்படவில்லை. பெல் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் 5 தேர்களையும் 2 முறை ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட்டு வரும் முருகர் தேரை வெள்ளோட்டம் பார்க்க வேண்டும். பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன கட்டண டிக்கெட் விற்பனை குறித்து கோயில் இணையதளத்தல் தெரிவிக்க வேண்டும்.

தீபத் திருநாளன்று திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை. கிரிவல பாதையில் இரு சக்கர வாகனத்தை கூட இயக்கக்கூடாது. அரசு கலைக் கல்லூரி அருகே நடைபெறும் கால்நடை சந்திக்கு 4 ஆயிரம் மாடுகள், குதிரைகள் வரக்கூடும். கால்நடைகளை கொண்டு வருவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். மாட வீதி மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும்.

பெயரளவில் இல்லாமல் மருத்துவ முகாம்களை செயல்படுத்த வேண்டும். கடந்த கால அனுபவங்கள் மூலமாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை மனதில் கொண்டு புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும். கிரிவல பாதையில் பழுதடைந்துள்ள கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோயிலில் உள்ள கழிப்பறைகளையும், திருப்பதிக்கு நிகராக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிரிவல பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும்.

தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம். இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி, தீபத் திருநாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில், அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதி சீட்டு வழங்கப்படும்.

கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும். தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிரிவல பாதையில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,700 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் இயக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story